மும்பை: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்த ரயிலில் 4 பேரை சுட்டுக்கொலை செய்த ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎப்) கான்ஸ்டபிள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் 31ம் தேதியன்று ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர் ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎப்) கான்ஸ்டபிள் சேத்தன் சிங்(34). இவர்அதே ரயிலில் பயணித்த அவருடைய மூத்த அதிகாரி டீக்காராம் மீனா உட்பட 4 பேரை, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஒழுங்கு நடவடிக்கையாக, சேத்தன் சிங்கை பணிநீக்கம் செய்து ஆர்பிஎப் மண்டல பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஆர்பிஎப் உயரதிகாரி உட்பட 4 பேரை கொலை செய்த கான்ஸ்டபிள் சேத்தன் சிங், முன்பு பலமுறை இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் பணியாற்றிய சேத்தன் சிங், காரணமே இல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தாக்கியுள்ளார். அதேபோல, குஜராத்தில் பணியாற்றியபோது, சக கான்ஸ்டபிள் மீது கடும் தாக்குதல் நடத்தினார். சக கான்ஸ்டபிள் ஒருவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடியுள்ளார். இந்த 3 விவகாரங்கள் தொடர்பாகவும் ஏற்கனவே விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.