பெங்களூரு: ராகுல் காந்தியை கண்டு பாஜ பயப்படுவதாகவும், அதன் வெளிப்பாடாகத்தான் அவரை பத்து தலை ராவணனாக சித்தரித்து பாஜ போஸ்டர் போட்டு தனது கீழ்தரமான கலாச்சாரத்தை காட்டியுள்ளது என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், ‘வட மாநிலங்களில் கூட ராவணனை வழிபடுகின்றனர். நமது கலாச்சாரம் பாஜவிற்கு முழுமையாக தெரிந்திருந்தால், இந்தளவிற்கு கீழ்த்தரமாக நடந்திருக்க மாட்டார்கள். ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்திற்கு பிறகு தான் இந்தியா கூட்டணி உருவானது.
இந்திய ஒற்றுமைக்காக உருவான கூட்டணி இது. ராகுல் காந்தியின் நடைபயணத்தை கண்டு பாஜ பயந்துபோய் கிடக்கிறது. அதனால் தான் ராகுல் காந்தியை பத்து தலை ராவணனாக சித்தரிக்கின்றனர். ராமருக்கும் ராவணனுக்கும் இடையேயான போர் குறித்த புராணங்களை பாஜ முதலில் ஒழுங்காக படிக்கவேண்டும். ராகுல் காந்தியை கண்டு பாஜ எந்தளவிற்கு பயப்படுகிறது என்பதை அவர்களது போஸ்டர் காட்டுகிறது. பாஜவின் இந்த செயலுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கிறது’ என்றார்.