கோவை: உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாச வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகையில் இருந்து சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். ராகுல் காந்தி வருகையால் கோவை, உதகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோடி சமூகம் குறித்த அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனையால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி., பதவி பறிபோனது.
இதையடுத்து இந்த தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில் தனது தொகுதியான வயநாட்டை பார்வையிடுவதற்காக இன்றும், நாளையும் ராகுல் காந்தியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ராகுல் காந்தி இன்று நீலகிரி வருகிறார். டெல்லியில் இருந்து விமான மூலம் புறப்பட்டு இன்று காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பின்னர், கார் மூலம் உதகை அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்குகிறார். ஒரு மணி அளவில் முத்தநாடுமந்து என்னும் தோழர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று மக்களுடன் உரையாடுகிறார். வயநாடு செல்லும் வழியில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் ராகுல் காந்தி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. பின்பு வயநாடுக்கு ராகுல் காந்தி செல்ல உள்ளார்.