புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும், அவரது சித்தப்பா மகனும் பாஜ எம்பியுமான வருண்காந்தியும் நேற்று கேதர்நாத்தில் ஒன்றாக வழிபாடு செய்தனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகனான மறைந்த சஞ்சய் காந்தி மற்றும் பாஜ எம்பி மேனகா காந்தியின் மகன் வருண்காந்தி. இவரும் உத்தரப்பிரதேச கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. மேலும் முக்கியமான பிரச்னைகளில் வருணின் கருத்துக்கள் சில நேரங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக இருந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று கேதர்நாத்தில் ராகுலும் வருணும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த மூன்று நாட்களாக இருந்து வருகின்ற நிலையில், ராகுலின் சித்தப்பா மகனான வருண் காந்தியும் தனது குடும்பத்தினருடன் நேற்று கேதர்நாத் வந்திருந்தார். இருவரும் கேதர்நாத் கோயிலில் சந்தித்துக்கொண்டனர். தொடர்ந்து இருவரும் ஒன்றாக சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே ராகுலும், வருணும் சிறிது நேரம் கலந்துரையாடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். ராகுல், வருண் சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்று கூறப்படுகின்றது. எனினும் இருவரது சந்திப்பு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.