சேலம்: சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், 10ம் வகுப்பு படித்து விட்டு எலக்ட்ரிக் வேலைக்கு சென்று வருகிறான். இவரும் அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் தாய், சிறுமியை திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து அங்குள்ள பள்ளியில் சேர்த்து விட்டார். தற்போது, அந்த சிறுமி அங்கு பிளஸ்-1 படித்து வருகிறாள். காதலியை தன்னிடம் இருந்து பிரித்து, வெளியூருக்கு அனுப்பி விட்டதை அறிந்த 17 வயது சிறுவன், பல இடங்களில் காதலியை தேடி பார்த்துள்ளான்.
கடந்த சில நாட்களுக்கு முன், காதலி திருப்பூரில் தங்கி படிப்பதை அறிந்து கொண்டான். உடனே திருப்பூருக்கு சென்ற சிறுவன், மாணவியை கண்டறிந்து மீண்டும் அவருடன் பேசி காதலை வளர்த்துள்ளான். இதனை தொடர்ந்து, கடந்த 4 நாட்களுக்கு முன், மாணவியை தனியாக அழைத்துச் சென்று, இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். நெருக்கமாக இருந்த போது, சில வீடியோக்களை சிறுவன் எடுத்துள்ளான். இதனிடையே, சேலத்தில் உள்ள மாணவி தாயின் செல்போனுக்கு, ஒரு வீடியோ வந்தது.
அதில், அவரது மகள், அந்த சிறுவனுடன் நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அந்த சிறுவனின் பெற்றோரிடம் சிறுமியின் தாய் கேட்டுள்ளார். அப்போது, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை அடித்து விரட்டியுள்ளனர். இதனால் வேதனையடைந்த அவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.