தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்வீரன் (52), விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சேட்டு (42) என்பவருடன் இரவில் நாட்டு துப்பாக்கியுடன் புதுப்பட்டி வனப்பகுதிக்கு முயல் வேட்டையாட சென்றுள்ளனர். அப்போது நரசிபுரம் பகுதியில் ஒரு விவசாய நிலத்திற்குள் சென்ற போது, நிலக்கடலை பயிரை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, தமிழ்வீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, தமிழ்வீரன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து, சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்த காவிரியப்பன்(60) மற்றும் தமிழ்வீரனுடன் முயல் வேட்டைக்கு சென்ற சேட்டு ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் இருவரையும் அடைத்தனர்.