ஈரோடு: ஈரோடு மாவட்ட வனப்பாதுகாப்பு படையினர், ஈரோடு வனச்சரக குழுக்கள், ஈரோடு வனவியல் விரிவாக்க கோட்ட குழுக்கள் உள்பட பல்வேறு வனச்சரக குழுவினர் காட்டு முயல் வேட்டை குறித்து நேற்று முன்தினம் தொட்டிபாளையம் கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாட்ஸ்-அப் செயலி குழு மூலம் தகவல்கள் பரிமாறிக்கொண்டு வேட்டையாடுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை கண்காணித்த வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்குள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக ஏராளமானோர் காட்டு முயலை வேட்டையாடி கொண்டிருந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து 107 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த 5 முயல்கள் மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகள், ஏராளமான செல்போன்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆடி மாதம் கோயில் திருவிழாவையொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் காட்டு முயலை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், அதன்படி இந்தாண்டு திருவிழாவையொட்டி வேட்டையாட வந்ததாகவும் தெரிவித்தனர்.