புழல்: புழல் மத்திய சிறைச்சாலையில் பார்வையாளர் மனு அளிக்கும் இடத்தின் அருகே நிழற்கூரை அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புழல் விசாரணை சிறையில் சுமார் 3,300க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களை மனு அளித்து பார்க்க திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகின்றனர். பார்வையாளர்கள் கைதிகளை பார்க்கும் இடத்தில் போதியளவில் இடவசதி இல்லாததால் பெரும்பாலான பொதுமக்கள் திறந்தவெளி பகுதியில் காத்திருக்கின்றனர்.
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள், பெண்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். உடல்நிலை பாதித்தவர்கள் மயங்கி விழும் சம்பவங்களும் நடக்கிறது. மேலும், அத்தியாவசியத் தேவையாக உள்ள குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோல், வாகன நிறுத்த வசதி இல்லாததால் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, மனு பார்க்கும் இடம் அருகே பார்வையாளர்கள் வசதிக்கென நிழற்கூரை அமைக்கவும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்கவும், சிறைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறைச்சாலை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.