புனே: புனே மகாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களில் கடந்த 3 மாதங்களில் பிரேக் டவுன் ஆகும் சம்பவங்கள் சரிந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயணிகளிடம் இருந்து வரும் புகார்களின் அடிப்படையில், பஸ்களை பராமரிக்கும் பணிகள் மேம்படுத்தப்பட்டன. தினசரி மற்றும் வாராந்திர பராமரிப்பு என அட்டவணை தயார் செய்து, அனைத்து டிப்போ மேலாளர்களுக்கும் பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடந்த 3 மாதங்களில் பேருந்துகள் பிரேக் டவுன் ஆகும் சம்பவங்கள் கணிசமான அளவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், சராசரியாக ஒரு மாதத்திற்கு 1,700 முதல் 1,800 வரை இருந்த பிரேக் டவுன்கள், தற்போது 1,300 என்ற எண்ணிக்கைக்கும் குறைவாகவே நிகழ்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 23 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதில் டயர் பஞ்சர் போன்ற காரணங்களால் ஏற்படும் பிரேக் டவுன்கள் தவிர்க்க முடியாதது.
மற்றபடி இன்ஜின் மற்றும் பேட்டரி ஆகியவைகளை சிறந்த முறையில் பராமரித்து வருகிறோம். இருப்பினும் இதில் பெரும்பாலும் தனியார் ஒப்பந்ததாரர்களின் பேருந்துகள் தான் அதிக அளவில் பிரேக் டவுன் ஆவது எங்களுக்கு கவலை அளிக்ககூடிய விஷயமாக உள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கும் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.