Tuesday, May 21, 2024
Home » உடுமலை அருகே மக்கள் வழிபாட்டால் மறையாத புலிக்குத்திக் கல்-வரலாற்று ஆய்வர்கள் தகவல்

உடுமலை அருகே மக்கள் வழிபாட்டால் மறையாத புலிக்குத்திக் கல்-வரலாற்று ஆய்வர்கள் தகவல்

by Lakshmipathi
Published: Last Updated on

உடுமலை : உடுமலை பகுதி முன்பு தளி பாளையப்பட்டால் ஆட்சி செய்த பகுதி என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். மேய்ச்சல் நிலங்களும், கால்நடைகளுமே அப்போதைய வாழ்நிலை மக்களின் சொத்தாக இருந்து வந்துள்ளது.இந்நிலையில், கால்நடைகளையும் மக்களையும் காப்பாற்றும் வகையில் வனவிலங்குகளிடமிருந்து காப்பாற்றுவதென்பது பெரும் பொருட்டாக இருந்தது.

பொதுமக்களுக்காகவும், கால்நடை செல்வங்களையும் காப்பாற்றும் வீரர்களுக்காக நடுகல் எழுப்பப்படும் வழக்கம் இருந்து வந்துள்ளது.நமது பகுதியில் கால்நடைகளை காப்பாற்றும் வகையில் எழுப்பப்பட்ட புலிக்குத்திக் கல் தேவனூர்புதூர், ஜிலோப்பநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அது போன்ற தளி ஜல்லிபட்டிக்கும் தெற்கு வீரஜக்கம்மா கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் தோட்டத்து சாளையில் கிணற்று மேட்டில் இரண்டடி உயரமும், ஒன்றேமுக்கால் அடி உயரமும் கொண்ட புடைப்புச்சிற்பம் பழங்கால இலந்தை மரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இலந்தை மரத்திற்கு நூறு வயதிற்கும் மேலிருக்கும் என்கிறார்கள் இப்பகுதி பொதுமக்கள். இந்த புடைப்புச்சிற்பத்தில் ஆபரணங்கள், அணிகலன்கள் அணிந்திருக்கும் ஒரு வீரன் புலியின் வாயிலினில் வேலை செருகி இருப்பது போன்றும், இருக்கும் இந்த சிற்பம் பொம்ம நாயக்கர் என்றும், புலிக்குத்தி வீரன் என்றும் அந்தப் பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.
தைப் பொங்கல் நாட்களில் சிறப்பு வழிபாடுகளும், மற்ற வெள்ளிக்கிழமை நாட்களில் தீபாராதனை வழிபாடும் நடத்துவதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

16,17 ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் புடைப்புச்சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும், மக்களுக்காகப் பாடுபட்ட ஒரு அரசன், அல்லது தலைவனின் செயலைப்போற்றும் வகையில் இந்தப் புடைப்புச்சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து
வீழ்ந்தெனக் கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’

என்பது எட்டுத்தொகை நூலான புறநானூற்றில் மாங்குடி கிழாரின் பாடல் 355. புகைவருடனான போரில் முன் நின்று போரிட்டு ஒளிமிகுந்த தந்தத்தை உடைய யானை மீது வேல் எறிந்து வீழ்ந்தவனுக்கு நடுகல் வைத்து, அதன் மீது நெல் தூவி வணங்கும் முறையைத் தவிர்த்து வேறு கடவுள் இல்லை என்கிறார் புறநானூற்றுப் புலவர். புலியைப் பிடிப்பதற்கும், அதை மக்களிடமிருந்து காப்பாற்றியவர்களுக்காக இவ்வாறான புறநானூற்றுப் பாடல்கள் நிரம்ப உள்ளதை மேற்கோடிட்டு வரலாற்று ஆய்வாளர்கள் இதற்கு உரிய விளக்கம் தருகின்றனர்.

சங்க இலக்கியப்பாடலில் புலியைத்தாக்கும் கல்லை பெருங்கல் அடார் என்று புறநானூறு 19 ஆம் பாடல் கூறுவதை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றனர். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் மதியழகன், கிருஷ்ணாபுரம் அரசு மேநிலைப்பள்ளி வரலாற்றுத்துறை பேராசிரியர் செ.ராபின், பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி, ஹேனா ஷெர்லி ஆகியோர் இந்த வரலாற்றுப் பணிகளை மேற்கொண்டனர்.

You may also like

Leave a Comment

ten + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi