தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ₹6.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு சென்னை கலெக்டர் அலுவலகத்தில்உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. ஒருவர் 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச்சென்றால் அதற்கு உரிய ஆவணத்தை காண்பிக்கவேண்டும் என்ற தேர்தல் விதிமுறை உள்ளது. அதையும் மீறி ஆவணமின்றி பணம் எடுத்து சென்றால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைப்பார்கள். உரிய ஆவணத்தை காண்பித்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக தேர்தல் பறக்கும் படையினர் சென்னை முழுவதும் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த பல கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி பைக்கில் வந்தவரை மடக்கி சோதனை செய்தபோது உரிய ஆவணமின்றி பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவொற்றியூர் துலுக்காணம் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 6 லட்சத்து 31 ஆயிரத்து 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.