புதுச்சேரி: புதுச்சேரி அரசு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது சபாநாயகர் செல்வம் செல்போனில் மூழ்கிய சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை சார்பில் புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் ஒற்றுமை ஓட்டம் நேற்று காலை நடந்தது. இந்த ஓட்டத்தை கவர்னர் தமிழிசை கொடியசைத்து தொடங்கி வைத்து சிறிது தூரம் ஓடினார். சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, டிஜிபி நிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழா துவங்கும்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, தேசியகீதத்தை அவமதிக்கும் வகையில் சபாநாயகர் செல்வம் செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.
இதை கவனித்த கவர்னர் தமிழிசை உடனே சபாநாயகரை தனது கையால் தட்டி தேசிய கீதம் இசைக்கப்படுவதை நினைவூட்டினார். உடனே சுதாரித்துக் கொண்ட சபாநாயகர் செல்போன் பேசுவதை நிறுத்திவிட்டு தேசியகீதம் பாடினார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.