புதுச்சேரி : புதுச்சேரியில் வீடு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக மின்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மின்துறை முடிவு செய்து மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து இருந்தது. இது தொடர்பாக பொது மக்களிடம் நேரடியாக கருத்தும் கேட்கப்பட்டது. தொடர்ந்து, மின்துறையின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்த மின்சாரத் துறை இணை ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் மாதம் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஒரு யூனிட் 1.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த கட்டணம் தற்போது ரூ.1.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல வீடுகளுக்கான மின் கட்டணம் முதல் 100 யூனிட்களுக்கு ரூ.1.90ல் இருந்து ரூ.2.25 ஆகவும் 101 முதல் 200 வரையிலான யூனிட்களுக்கு ரூ.2.90ல் இருந்து ரூ.3.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த மின் இணைப்புகளை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட் வரை வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.5.70ல் இருந்து ரூ.6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.45ல் இருந்து ரூ.5.60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.