சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எழும்பூர் இ.பரந்தாமன்(திமுக) பேசியதாவது:
தடம் எண் 34, திருவொற்றியூர் முதல் அம்பத்தூர் வரையும், 7 இ பிராட்வே முதல் அம்பத்தூர் வரை, 35 பிராட்வே முதல் அயனாவரம், ஆகிய பேருந்துகள் எல்லாம் எழும்பூர் தொகுதி சூளை வழியாக செல்கிறது. இவைகளுக்கு கூடுதல் சேவை தேவைப்படுகிறது என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வர பெற்றிருக்கிறது. எனவே இந்த வழித்தட பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுமா ? மேலும் 4 டி வள்ளலார் நகர் முதல் காயிதேமில்லத் கல்லூரி பேருந்து யானை கவுனி வழியாக சென்று கொண்டிருந்தது.
தற்போது அங்கு பாலம் வேலை நடைபெறுற்று வருகிறது. இதனால் பழைய நடராஜன் தியேட்டர் வழியாக இயக்கப்பட்டு கொண்டிருந்தது. அதுவும் கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது. அது மீண்டும் இயக்கப்படுமா? இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது : எம்எல்ஏ பரந்தாமன் இது குறித்து ஏற்கனவே என்னிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அது தொடர்பாக மாநகர போக்குவரத்து அலுவலர்களை ஆய்வு செய்யச் சொல்லி உள்ளேன். அங்கே கட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்ற பாலம் இன்னும் இரண்டு மாதங்களில் பணி முடிவடைய இருக்கிறது. அதன் பிறகு பேருந்து இயக்கப்படும். பணி முடிவடைந்த பிறகு அவரது தொகுதி மக்கள் அவரை வாழ்த்துவார்கள். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.