சென்னை: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் போராட்டத்தை ஆரம்பித்து 250 நாட்களை கடந்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்நாடு, வெளிநாட்டு விமான நிலையங்கள் உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு தமிழகம் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக செல்வதும், வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. அத்துடன் கார்கோ சேவை எனப்படும் கொரோனா தடுப்பூசி உள்பட மனிதர்கள், பயிர்கள், கார், லாரிகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளுக்கு தேவையான கெமிக்கல் போன்றவை வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து வெளிநாடு, உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கார்கோவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால், சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் பயணிகள் வருகை, புறப்பாடு, சரக்கக சேவையை கையாள்வது அதிகாரிகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய போதிய இடவசதிகள் இல்லை. இதனால், தமிழகத்தில் 2வது சர்வதேச புதிய விமான நிலையம் தொடங்க வாய்ப்பு உள்ள இடமாக, காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்புரம் கிராமத்தை மையமாக வைத்து, சர்வதேச புதிய விமான நிலைய அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அக்கிராமத்தை சுற்றியுள்ள 13 கிராமங்களில், 5000 விளை நிலங்கள் விமான நிலையத்துக்கு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
குடியரசு தினம் முதல் உலகத் தண்ணீர் தினம் வரை 5 முறை கிராம சபை கூட்டங்களில் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏகானாம்புரம் மக்களின் போராட்டம் 250-வது நாளாக எட்டியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று காஞ்சிபுரம் , திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 540க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 250-நாள் போராட்டமாக ஏகனாம்புரம் பகுதியில் கிராம மக்கள் ஒன்று கூடி கண்டன பொதுக்கூட்டம் நடந்தினர். இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.