சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆர்.எஸ்.கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் பங்குதாரர்களான சென்னையை சேர்ந்த ராஜ்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகம் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த ரெத்தினம் ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மன்களை ரத்து செய்யக்கோரி மூவரும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, அப்துல்சலீம், அப்துல் ஹமீது, வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி ஆகியோர் ஆஜராகி, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் மனுதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், சம்மன் அனுப்பப்பட்டு அவசர கதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டனர். அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் மூவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
எனவே, சம்மனை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், இந்த வழக்கின் உத்தரவு வரும் வரை மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை செயல்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.