சென்னை: ஓய்வு பெற்ற பொருளியல் பேராசிரியரும், டி.என்.பி.எஸ்.சி முன்னாள் உறுப்பினருமான பாலசுப்ரமணியன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓய்வுபெற்ற பொருளியல் பேராசிரியரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பாலசுப்ரமணியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். பாலசுப்ரமணியன் மாநிலக் கல்லூரியின் பொருளியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து தடம் பதித்ததோடு, டி.என்.பி.எஸ்.சி, எம்.டி.என்.எல் உள்ளிட்டவற்றிலும் உயர் பொறுப்புகளை வகித்துப் பெரும் பங்காற்றியவர். அவரது மறைவு நமது மாநிலத்துக்கு ஏற்பட்ட இழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.