சென்னை: தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் 25 சதவீதம் வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணைப்பித்துள்ள நிலையில் நடப்புக் கல்வியாண்டில் கட்டண உயர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் மாணவ-மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 25 சதவீதம் வரை கட்டண உயர்வு கேட்டு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளன.
செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என கோரியுள்ளனர். இதனால் வரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றப்பட உள்ளன. மாற்றப்படும் புதிய கட்டண அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் ரூ.50 ஆயிரம் எனவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.85 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.