பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தங்க நகைகளை அடகு வைக்கும் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு சுகன்யா (32) என்பவர் மேலாளராக பணியாற்றுகிறார். கடந்த மாதம் 3ம் தேதி, 40 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் அடகுவைத்து ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். இதன்பிறகு குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் நபர் இல்லாத காரணத்தினால் அன்றைய தினம் தங்க நகைகளை மதிப்பீடு செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி அந்த நகைகளை மதிப்பீட்டாளர் சரி பார்த்தபோது அந்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகைகள் என்பது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நிறுவனத்தின் ஊழியர்கள் குறிப்பிட்ட அந்த நபர் கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்தபோது போலியான முகவரி என்பது தெரியவந்ததும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, வியாசர்பாடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வானமாமலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.