சென்னை: சென்னை பாரிமுனை அருகே தனியார் நிறுவனத்தின் பணத்தை லட்சகணக்கில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சென்னை பாரிமுனையில் வடக்கு கடற்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 6 பேர் எச்.டி.எஃப்.சி வங்கி எதிரே நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் சுற்றி வளைக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடினார். மற்ற 5 போரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் மன்னடி இரும்பு கடையில் பணியாற்றும் நண்பர் சாதிக்கை வழிமறித்து லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக தஞ்சை தோட்டக்காடு கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், திருவிடைமருதூரை சேர்ந்த அபுல்ஹசன், இவரது ,மருமகன் சென்னை அமைந்தகரையை சேர்ந்த சேக் முகமது ஹர்ஷன், வேலூரை சேர்ந்த பவன் குமார், திருவள்ளூரை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்திகள், இரும்பு ராடுகள், கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட கார் தஞ்சை பாஜக பிரமுகர் அழகருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.