புதுடெல்லி: ‘வாஜ்பாய் தலைமையில் நாடு பெரும் பலனடைந்தது’ என பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார். பாஜ கட்சியின் முதல் பிரதமரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி தனது 93வது வயதில் காலமானார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், பாஜ தலைவர்கள் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் வாஜ்பாய் முக்கிய பங்காற்றி உள்ளார். அவரது தலைமையில் நாடு பெரும் பலனடைந்தது. பல்வேறு துறைகளில் நாட்டை 21ம் நூற்றாண்டை நோக்கி முன்னெடுத்து கொண்டு சென்றார். நாட்டின் 140 கோடி மக்களுடன் சேர்ந்து நானும் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’’ என்றார்.