Sunday, April 28, 2024
Home » பெண் சக்தி

பெண் சக்தி

by Mahaprabhu

பெண்சக்தி குறித்து மேடைக்கு மேடை ஒரு புதிய பாடமே நடத்துவார் பிரதமர் மோடி. சமீபத்தில் கூட இந்திய ஒற்றுமை நீதியாத்திரை நிறைவு விழா மும்பையில் நடந்த போது அந்த விழாவில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் அதிகார சக்தியை பற்றி பேசியதை, பெண் சக்தியையும், தெய்வ சக்தியையும் அவர் இழிபடுத்தி பேசிவிட்டதாக திசைதிருப்பி, தேர்தல் கமிஷன் வரை புகார் செய்தவர் தான் பிரதமர் மோடி. ஆனால், 2014 முதல் 2024ம் ஆண்டு வரை பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்கள் படும் பாடு என்ன என்பது இப்போது புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு கரிபூசியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. பா.ஜ எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி போராட்டம் நடத்திய பெண் மல்யுத்த வீரர்களை இதே மோடி அரசு தானே மிருகத்தனமாக அடக்கியது. குஜராத் பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளிகளை இதே மோடி தலைமையிலான பா.ஜ அரசு தானே விடுவித்தது. உச்சநீதிமன்றம் தலையிட்டு தானே உள்ளே தள்ளியது.

கதுவா முதல் ஹத்ராஸ் வரை நாடு முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக மாற்றியது மோடி அரசு தானே? மணிப்பூரில் பெண்கள் நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்டது பிரதமர் மோடி அரசு நடந்த போது தானே. அதைப்பற்றி எல்லாம் ஒரு வார்த்தை கூட இன்று வரை பிரதர் மோடியும், மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் பேசவில்லை. இருவரும் வாய்மூடி மவுனிகளாகத்தானே உள்ளார்கள். சமீபத்தில் பூடான் வரை சென்று வர முடிகிறது. இதே இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநிலம் மணிப்பூருக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டு இருக்கும் பெண்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடிக்கோ அல்லது அவரது தலைமையின் கீழ் மகளிர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானிக்கோ மனம் வரவில்லை தானே?. அதனால் தான் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறன்றன. 2014 முதல் 2022 வரை மட்டும் 35 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு பெரு நகரங்களிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நிர்பயா நிதியை அமைத்தது. இதற்காக அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ₹1000 கோடியை ஒதுக்கினார்.

ஆனால், மோடி ஆட்சி அமைந்தபிறகு மகளிர் அமைச்சகம் அந்த நிதியைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. 2022 வரை வெறும் 33 சதவீதம் நிதி மட்டும் தானே பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் பெண்களுக்கு எதிரான அத்தனை குற்றங்களையும், பெண்களுக்கான வேலைவாய்ப்புகளையும் அதிக அளவு பறித்தது பிரதமர் மோடி தலைமையிலான அரசு தானே?. பட்டியல் போட்டு காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு இப்போது வரை பா.ஜவிடம் இருந்து பதில் இல்லை. ஆனால் இமாச்சலபிரதேச மாநிலத்தில் மண்டி மக்களவை தொகுதியில் பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் நடிகை கங்கனாவை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஷிரினேட் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமர்சனம் செய்து விட்டார் என்று கூறி வானளவு குதிக்கிறார் ஸ்மிருதி இரானி. அதுவும் ஹேக் செய்யப்பட்ட பக்கம் என்று சுப்ரியா விளக்கம் கொடுத்த பிறகும். இதுதான் பா.ஜவின் மகளிர் அரசியல்.

You may also like

Leave a Comment

5 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi