சென்னை: அனைத்திந்திய பாங்க் ஆஃப் பரோடா ஓபிசி தொழிலாளர் நலன் கூட்டமைப்பு சார்பில் 8வது ஓபிசி அனைத்திந்திய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.இதனை தொடர்ந்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: ஓபிசி சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டிற்காகவும், பகுஜன் ஒற்றுமைக்காகவும் முன்னாள் பிரதமர் விபி சிங், பிபி மண்டல் போன்றவர்கள் பணியாற்றினார்கள்.
சமூக நீதிக்கு ஆதரவாளர்கள், எதிரானவர்கள் என்ற இரு சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் அமைந்திருந்ததாக கருதுகிறேன். பிரதமர் மோடி, அண்மை காலமாக பேசி வரும் கருத்துகள் அவர் மிகவும் பதற்றத்திலும் தோல்வி பயத்திலும் இருப்பதை உணர்த்துகிறது.
இந்தியா கூட்டணியில் குழப்பம்தான் இருக்கிறது” என மோடி கூறுகிறார். ஆனால் அவர்தான் குழப்பத்தில் இருக்கிறார். ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்குவார்கள் என பிரதமர் கூறுவதை ஒரு வகையில் நான் ஏற்கிறேன். ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பதால் என்ன தவறு? ஒரே கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமர் பொறுப்பு வகித்தால் ஆட்சி நிர்வாகம் உறுதியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கும்.