சென்னை : பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு என்ன செய்தார்? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் பேசிய அமிஷ் ஷா, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். மேலும் தமிழை வளர்க்க பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார் எனவும் கூறினார்.
இந்த நிலையில், இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு என்ன செய்தார்? அங்குதான் அவர் உலக சாதனையை செய்துகொண்டிருக்கிறார். இராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு இடையே வெறும் 17 கிலோ மீட்டர் இரயில் தண்டவாளத்தை 4 ஆண்டுகளாக அமைத்துக்கொண்டிருக்கிறார். ரூ208 கோடி திட்டத்தை ரூ521 கோடியில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ்சில் சேர்ந்த மாணவர்கள் 2026 ல் படிப்பு முடிக்கும் வரை கல்லூரிகட்டிடத்தை கண்ணில் பார்க்க கூடாது என்பதற்காக இராமநாதபுரத்தில் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டும் அவரே துவக்கிவைத்த திட்டங்கள்.1000 ஆண்டு சாதனையை முறியடிப்பதென்றால் சும்மாவா?. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.