புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த புகாரில் பணி ஓய்வு பெறும் நாளில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் குமரன். இவர் நேற்று பணி ஓய்வு பெறும் நிலையில் அவரை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா திடீரென பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் குமரன் கந்தர்வ கோட்டையில் பணியாற்றிய போது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரது பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை அவருக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்கள், ஓய்வூதியம் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரனுக்கு நடந்த சம்பவம் மற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.