ஜெய்ப்பூர்: விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பேசியதாவது:
தற்போது நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்ப பல்வேறு செயல்கள் செய்யப்படுகின்றன. சில சமயம் பிரதமர் மோடி தனது பொய்யான துணிச்சலை காட்டுகிறார். சில சமயம் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். காற்றில் பறக்கிறார், கடலுக்கு அடியில் செல்கிறார். இவற்றால் மக்களாகிய உங்களுக்கு என்ன லாபம்?
மக்களின் மிகப்பெரிய பிரச்னை பணவீக்கம். விலைவாசி உயர்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர். மற்றொன்று வேலையில்லா திண்டாட்டம். ஆனால் இதையெல்லாம் பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடியாது என்றே நான் நம்புகிறேன். விவசாயிகள் கடனில் சிக்கிஉள்ளனர். ஆனால் டிவியிலும் மீடியாவிலும் நாடு முன்னேறி வருவதாக காட்டப்படுகிறது. அதிகப்படியான அதிகாரம் இருக்கும் போது, யாரும் உண்மையை சொல்வதில்லை. அதிகாரிகளும், சக அமைச்சர்களும் யதார்தத்தை பற்றி மோடியிடம் சொல்ல பயப்படுகின்றனர். எனவே, நாட்டு மக்களிடமிருந்து மோடி இப்போது முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதை உணர்கிறேன்.
ஊழலை ஒழிப்பதாக பாஜ கூறுவது உண்மையல்ல. உண்மையில் அவர்கள் ஊழல் சாயம் பூசி எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம், மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம். அதிகாரத்தில் இருக்க மதத்தைப் பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்களின் வலையில் விழுந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.