மதுரை: 2015ல் மதுரை மாவட்டம் கார்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை அருகேயுள்ள சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. அதிமுக கிளைச் செயலரான இவர், கார்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.
இவர் வண்டியூர் செளராஷ்டிரபுரம் பகுதியில் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை மாலையில் அவர் கார்சேரி கோயில் பகுதியில் இருந்தபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மக் கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டது. பலத்த காயமடைந்த கருப்பசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதுதொடர்பாக சிலைமான் போலீஸார் விசாரணை நடத்தி, கார்சேரி முன்னாள் ஊராட்சித் தலைவர் முனியசாமி, அவரது ஆதரவாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததில் ஊராட்சி மன்றத் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை மாவட்ட 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்ச்செல்வம், சுந்தரபாண்டி, பிரபுதேவா, இளவரசன், கவியரசன், அஜித் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.