டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து மார்ச் 22-ல் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் ED காவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றோடு கெஜ்ரிவாலின் காவல் முடிவடையும் நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.
அப்போது செய்தியாளர்களுக்கு அர்விந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது; டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாகவும், சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை. தனது கைது அரசியல் சதி என்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.