சென்னை: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள அதிமுகவை சேர்ந்த ராஜசேகர் என்பவரை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம், வண்டலூர், நெடுங்குன்றம், ஊனைமாஞ்சேரி, வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், குமிழி, பெருமாட்டுநல்லூர், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கஜா (எ) கஜேந்திரன், தேமுதிக மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஊரப்பாக்கம் எம்.ஜி.மூர்த்தி ஆகியோர் தலைமையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ரவி, சாந்திபுருஷோத்தமன், ஹரிகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கன்னியப்பன், நிர்வாகிகள் ரபிக், ரங்கன், கண்ணப்பன், கார்த்திக், புஷ்பராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பிரசார வாகனத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பிரசாரம் செய்து வந்தனர். ஆனால் நேற்று சுட்டெரித்த வெயிலை தாங்க முடியாமல் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் பிரசார வாகனத்தில் ஏறி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்க முடியாமல் தனது காருக்குள்ளேயே சுற்றி வலம் வந்தார். இதனால் கட்சி தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
* கொக்கு வழங்கினோம்
பிரசாரத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் பேசுகையில் அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி, இலவச சைக்கிள் வழங்கினோம். அது மட்டுமா? ஆடு, மாடு, கோழி, கொக்கு கொடுத்தோம் என்றார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிரித்தபடியே கொக்கு எப்போது கொடுத்தீர்கள் என்று கேட்டனர்.
* வேட்பாளருக்கு முக்காடு
அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பிரசாரத்துக்காக சிறுவர்கள் மற்றும் குதிரைகளை வரவைத்தனர். இதில் வேட்பாளருக்காக அந்தந்த ஊராட்சிகளில் ஏராளமான பெண்கள் கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். இதில் வழிநெடுகிலும் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வரவேற்றனர். அப்போது வேட்பாளர் முகத்தில் பூக்கள் விழாத வகையில் அவருக்கு முக்காடு போட்டு தொண்டர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.