நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்.19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு மார்ச் 20ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாள் ஆகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் ஏப்.26ம் தேதி என 7 கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு பிரசாரம், வாக்காளர்களை நேரடியாக சென்று கள ஊழியர்கள், பூத் சிலிப் கொடுப்பது போன்றவற்றுக்கு போதிய அவகாசம் கிடையாது என அனைத்து கட்சியினரும் குறை கூறி வருகின்றனர்.
இதுபோன்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையும் உத்தேசமாக யோசனை செய்து ஏப்ரல் கடைசி வாரத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என முடிவு செய்து 10, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளை அறிவித்து முடியும் தறுவாயில் உள்ளது. ஆனால் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மார்ச் 22ம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைகிறது. வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான முழு ஆண்டு தேர்வுகளை ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை, அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பால் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் நிலவி வருகிறது. தேர்தலுக்கு முன்கூட்டியே அனைத்து தேர்வுகளையும் முடிக்க வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு நேற்று மறு அறிவிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி அட்டவணை வெளியிடப்படவில்லை.
இதுபோன்று பொதுத்தேர்வுகளான பிளஸ்2 தேர்வு தாள்கள் திருத்தம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 தேர்வு தாள்கள் திருத்தம் ஏப்ரல் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வும் ஏப்ரல் 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுவதாக ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு பெரும்பாலானோர் ஆசிரியர்கள் தான் ஈடுபடுத்தப்படுவார்கள். அதற்காக அவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி பட்டறை வகுப்புகள் நடத்தப்படும்.
இதில் அவர்கள் கலந்து கொள்வதால் 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய தேர்வுத்தாள்களின் திருத்தம் பணிகள் தாமதமாகும். இதனால் ரிசல்ட் அறிவிப்புகளும் தாமதமாகும் என ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன. முன்கூட்டியே முடிவு செய்து வெளியிடப்படும் அறிவிப்புகள், சில நேரங்களில் மாற்றங்களை தான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்காமல் தேர்வுகளை முன்கூட்டியே நடத்திவிட்டு தேர்தலுக்கு பிறகு ரிசல்ட் தேதி தள்ளிப்போனால் தப்பு இல்லை.