பரமக்குடி: ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளரை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் மூன்றாகவும், நயினார்கோவில் ஒன்றியம் இரண்டாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமிக்கு எதிராக சொந்த கட்சியினரே போஸ்டர்களை ஒட்டி வந்தனர்.
இந்த நிலையில், ‘ராமநாதபுரம் அதிமுகவில் பணம் தருவோருக்கு மட்டும் தான் பதவியா? உழைப்பவருக்கு அல்வா மட்டும் தானா?, உழைக்க போராட இளைஞர்கள் தேவை. பதவிக்கு மட்டும் பணக்காரன் தேவை. என்று மாறும் இந்த அவல நிலை, எல்லாம் அம்மாவின் ஆன்மாவிற்கே வெளிச்சம்’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. பணம் தருபவருக்கே பதவி வழங்கப்படுவதாக சொந்த கட்சியினரே ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.