திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பிரவீனா மற்றும் அவரது மகளின் போட்டோக்களை மார்பிங் முறையில் ஆபாசப் படங்களாக மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்த நெல்லை வாலிபர் கைது செய்யப்பட்டார். மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் பிரவீனா. ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, உஸ்தாத் ஹோட்டல், ஹனி பீ மெமரீஸ் உட்பட ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ளார். டப்பிங் கலைஞரான இவர், தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, லாபம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தமிழில் சீரியலிலும் நடித்துள்ளார். இவருக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம் ஆகும்.
இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரவீனாவின் ஆபாசப் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது குறித்து அறிந்த நடிகை பிரவீனா திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் ஆபாச போட்டோக்களை பகிர்ந்தது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாக்யராஜ் (26) என தெரியவந்தது. இவர் டெல்லியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவனந்தபுரம் போலீசார் உடனடியாக டெல்லி விரைந்து சென்று பாக்யராஜை கைது செய்தனர். விசாரணையில் அவர் நடிகை பிரவீனாவின் போட்டோக்களை சமூக வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து அதை மார்பிங் முறையில் ஆபாசப் படங்களாக மாற்றியது தெரியவந்தது.
போலீசார் அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு மாதத்திற்குப் பின் பாக்யராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு மீண்டும் டெல்லிக்கு சென்ற பாக்யராஜ், அங்கிருந்தவாறு நடிகை பிரவீனா மற்றும் அவரது மகளின் போட்டோக்களை மார்பிங் முறையில் நிர்வாண புகைப்படங்களாக மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இதுகுறித்து நடிகை பிரவீனா மீண்டும் திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டெல்லி சென்று பாக்கியராஜை கைது செய்தனர்.