சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) கல்வி பிரிவு ஆலோசகர் மம்தா அகர்வால், அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள்தொகை பெருக்கம் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புக்கேற்ப சமமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதன்மூலம் மனித வாழ்க்கையானது ஆரோக்கியமாக அமையும். மக்கள் தொகை பெருக்கத்தினால் நம்நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை பொறுப்புள்ள குடிமக்களாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நிலம், உணவு, நீர் மற்றும் ஆற்றல் போன்ற அனைத்து வளங்களும் குறைவாக இருக்கும் நிலையில், வேகமாக அதிகரித்துவரும் மக்கள்தொகையால் உணவுப் பாதுகாப்பின்மை, நீர் மற்றும் நிலப் பற்றாக்குறை ஏற்படும். மாசுபடுதல் அதிகரிக்கும். சமூகம் மற்றும் அரசியலில் உறுதியற்ற தன்மை ஏற்படலாம். எனவே ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகரித்த கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் மக்கள்தொகை பெருக்கத்தின் எதிர்மறையான விளைவுகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ப மக்கள்தொகை வளர்ச்சி, அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்த கருத்தரங்கு, பயிலரங்குகள், வினாடி-வினா போட்டி உள்ளிட்டவற்றை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.