Monday, May 20, 2024
Home » சாலை விதிகளை மீறி வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

சாலை விதிகளை மீறி வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

by Ranjith

சென்னை: சாலை விதிகளை மீறி பைக்கை ஓட்டிச்சென்று வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கிய புகாரில் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்தனர். கடந்த 17ம்தேதி டிடிஎப் வாசன் மற்றும் அவரது நண்பரான அஜித் ஆகிய 2 பேரும், தனித்தனி பைக்குகளில் சென்னையிலிருந்து – மகாராஷ்டிராவிற்கு செல்வதற்கு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றனர். காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் சர்வீஸ் சாலையில் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வீலீங் சாகசத்தில் ஈடுபட்டனர். செல்லும் வழியில் பாலோயர்ஸ் எனப்படும் ஆதரவாளர்களை வரவழைப்பதற்காக வரும் இடங்கள் குறித்து சமூகவலைதளங்கள் மூலமாக பதிவிட்டிருக்கிறார்.

இதனால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காகங்கே இளைஞர்கள் திரண்டிருந்தனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக டிடிஎப் வாசன் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார். தாமல் பகுதியில் சர்வீஸ் சாலையில் வீலிங் செய்யும்போது, பைக் நிலைதடுமாறி இரண்டு மூன்று முறை தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிடிஎப் வாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு காரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை பெற்றார். அவரது கைக்கு மாவுகட்டு போடப்பட்டு கால், உடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னையில் சிகிச்சை பெற்று கொள்வதாக கூறி, அவரது நண்பர்கள் அவரை அழைத்து சென்றனர்.

இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் காவல் துறையினர், மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட 2 பிரிவுகள் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 2 பிரிவுகள் என மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎப் வாசனை, நேற்று அதிகாலை போலீசார் கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து டிடிஎப் வாசன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi