சென்னை: தேசிய தேர்வு முகமை மூலம் அடுத்த கல்வியாண்டில் (2024-25) நடக்க இருக்கும் தேசிய அளவிலான முக்கிய தேர்வுகளின் அட்டவணை நேற்று வெளியானது. அதன்படி, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, ஜெஇஇ தேர்வுகள் ஜனவரி, மே மாதங்களில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட தேசிய தேர்வு முகமை உயர்கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ, மாணவியர் சேர்ந்து படிப்பதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில் தேசிய அளவிலான பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் படிப்புகள், பல்கலைக் கழக மானியக் குழுவின் போட்டித் தேர்வுகள் ஆகியவை அடங்கும். குறிப்பாக ஜெஇஇ, நீட், சியுஇடி, யுஜிசி-நெட் ஆகிய தேர்வுகள் இடம் பெறுகின்றன.
இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டான 2024-25ல் தேசிய தேர்வு முகமை நடத்த உள்ள தேர்வுகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தேர்வுகளின் தனித்துவுமான விவரங்கள் அந்தந்த மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தெரிவிக்கப்படும். இது குறித்த விவரங்கள் விண்ணப்பப்பதிவுகள் தொடங்கும்போது அறிவிக்கப்படும். கணினி வழியில் நடத்தப்படும் மேற்கண்ட தேர்வுகளின் முடிவுகள், தேர்வு முடிந்த 3 வாரங்களுக்குள் வெளியிடப்படும். 2024ம் ஆண்டு மே மாதம் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான முடிவு 2024 ஜூன் 2வது வாரத்தில் வெளியிடப்படும். மேற்கண்ட தேர்வுகள் தொடர்பான கூடுதல் விவரம் மற்றும் தேதிகள், அது தொடர்பான கட்டளைகள் குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர் தேசிய முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nta.ac.in ல் தெரிந்து கொள்ளலாம்.