பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில் நேற்று முன் தினம் மாலை 3 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை மக்களின் பயன்பாட்டுக்கு ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட கரையான்சாவடி-ஆவடி சாலையில் மின்வாரியம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், கீழ்மா நகர் பகுதியில் ரூ.13.5 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல், சென்னீர்குப்பம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மேற்கண்ட 3 இடங்களில் ரூ.37.5 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகள் துவக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மின்வாரிய நிர்வாக பொறியாளர் மாணிக்கவேலன் தலைமை தாங்கினார். இதில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று, 3 இடங்களிலும் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை மக்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். இந்த அதிநவீன புதிய உயர் அழுத்த மின்மாற்றிகள் மூலம் அந்தந்த பகுதிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அப்பகுதி மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகரமன்ற உறுப்பினர் தீபா யுவராஜ், மின்வாரிய அதிகாரிகள் முத்துகிருஷ்ணன், தீனதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.