கரூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வாழைத்தார் கமிஷன் மண்டியில் அதிக அளவிலான வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டது. கரூர் மார்க்கெட் அருகே வாழைத்தார் கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு லாலாப்பேட்டை, குளித்தலை, மாயனூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், தொட்டியம், நாமக்கல் மாவட்டம் மோகனூர் போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் வாழைத்தார் ரகங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் பண்டிகை, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் வாழைத்தார் கமிஷன் மண்டிக்கு அதிகளவு வாழைத்தார்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக வாழைத்தார் கமிஷன் மண்டிக்கு அதிக அளவில் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. நேற்றும் வாழைத்தார் கமிஷன் மண்டிக்கு அதிகளவு வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வந்து தேவையான ரகங்களை வாங்கிச் சென்றனர். இதனால் வாழைத்தார் கமிஷன் மண்டி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.