சென்னை: அரசியல் கட்சி தொடங்கி, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று கூறும்போது, ‘நான் அரசியலுக்கு வரப்போகிறேன். விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளேன். இந்த கட்சி, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும். நானும் ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் என விஷால் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஷால் புது அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் அதனை விஷால் மறுத்துவிட்டார். மேலும் “வரும் கலகட்டங்களில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என விஷால் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். “நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும். அதுதான் எனது ஆசை. மக்கள் அதை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்” என விஷால் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் எனவும் மக்களுக்கு போதுமான வசதியில்லை என்று கூறிய விஷால், அதன் காரணமாகவே தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.