சுவீடன் : பேரணி மூலம் போக்குவரத்திற்கு முடக்கத்தை ஏற்படுத்தியதாக கூறி சுவீடனைச் சேர்ந்த இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்-ஐ போராட்டக் களத்தில் இருந்து காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். கடந்த மாதம் மால்மோ துறைமுகம் அருகே நடந்த பேரணியில் காவல்துறையின் உத்தரவை மீறியதற்காக பருவநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் திங்களன்று நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார்.சட்ட அமலாக்கத்திற்கு கீழ்ப்படியாதது மற்றும் பொது இடத்தில் போக்குவரத்து முடக்கத்திற்கு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டிய நீதிமன்றம், அவருக்கு சுமார் ரூ.20,000 அபராதம் விதித்தது.
தண்டனைக்கு பிறகு நீதிமன்றத்தில் பேசிய கிரேட்டா, காவல்துறை உத்தரவை மீறியதை ஒப்புக் கொண்டார். ஆனால் தேவை ஏற்பட்டதால் விதிகளை மீறும் சூழல் உருவாகியதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.நீதிமன்ற அபராதத்தை உடனே செலுத்தாத நிலையில், நேற்று மால்மோ நகரில் நடைபெற்ற புகைவடிவ எரிபொருட்களுக்கு எதிரான மற்றொரு போராட்டம் ஒன்றில் பங்கேற்றார். இதையடுத்து போராட்டக்களத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.
தண்டனைக்கு பின்பும் மால்மோ துறைமுகத்திற்கு சென்று போராட்டம் மூலம் போக்குவரத்து முடக்கத்தை ஏற்படுத்தியதால் கிரேட்டா மற்றும் பிற ஆர்வலர்களை வெளியேற்றியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.காவல் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சுவீடன் பாராளுமன்றத்தின் முன் நடத்திய போராட்டங்களுக்கு பின் உலகெங்கும் உள்ள காலநிலை ஆர்வலர்களின் முகமாக 20 வயது கிரேட்டா துன்பெர்க் மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.