Sunday, September 1, 2024
Home » காவல்துறையில் 3,359 பணியிடம் விழுப்புரத்தில் உடற்தகுதி தேர்வு தொடங்கியது

காவல்துறையில் 3,359 பணியிடம் விழுப்புரத்தில் உடற்தகுதி தேர்வு தொடங்கியது

by Lakshmipathi
Published: Last Updated on

* முதல் நாளில் 245 பேர் தேர்ச்சி

* டிஐஜி, எஸ்பி நேரில் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சீருடை பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் 245 பேர் தேர்ச்சி பெற்றனர். டிஐஜி, எஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர் ஆயுதப்படையில் 780 பெண்கள், இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 1,819 ஆண்கள், சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் இரண்டாம் நிலைக் காவலர் 86 பதவியில் ஆண்கள் 83, பெண்கள் 3, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் 674 ஆண்கள் என மொத்தம் 3,359 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக உடற்தகுதி, உடற்திறன் தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி விழுப்புரம் கா.குப்பம் ஆயுதடை மைதானத்தில் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 827 பேருக்கு நேற்று தொடங்கிய தேர்வு வரும் 9ம் தேதி வரை நடக்கிறது.

நேற்று காலை முதல் கட்டமாக 420 தேர்வர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு, எடை, உயரம் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் அவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதல் நாளில் 64 பேர் பங்கேற்கவில்லை. தொடர்ந்து உயரம், மார்பளவு குறைவில் 16 பேரும், 1,500 ஓட்டத்தில் 95 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அடுத்தகட்டமாக உடற்திறன் தேர்வுக்கு 245 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்வு பணிகளை விழுப்புரம் சரக காவல் துறை துணைத்தலைவர் திஷாமிட்டல், எஸ்பி தீபக்சிவாச் ஆகியோர் பார்வையிட்டு தேர்வுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு பணியில் கூடுதல் எஸ்பி, 3 டிஸ்பி, 17 போலீசார், 79 அமைச்சுபணியாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று உடற்தகுதி தேர்வுக்கு 407 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 8, 9ம் தேதி உடற்திறன் தேர்வுகளான 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம், அல்லது உயரம் தாண்டுகள் போட்டி நடக்கிறது.

You may also like

Leave a Comment

16 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi