கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகைக்கடையில் வெல்டிங் மூலம் கடையின் ஷட்டரை உடைத்து மர்மநபர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கிருஷ்ணர் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் புதியதாக நகைக்கடையை துவங்கியுள்ளார். இன்று(மார்ச் 05) விடுமுறை என்பதால் இதனை கவனித்த திருடர்கள் நகைக்கடையை நேற்று இரவு நோட்டமிட்டு இரும்புகளை கரைக்கும் இயந்திரங்களை கொண்டு ஷட்டரின் முன் உருக்கி நகைக்கடை உள்ளே நுழைய முற்பட்டுள்ளனர்.
அப்பகுதி வழியே வந்த நபர் திருட்டு முயற்சியை கண்டு, நகைக்கடை உரிமையாளர் மற்றும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். உடனடியாக நகைக்கடைக்கு விரைந்த உரிமையாளர் உள்ளே இருந்த திருடனை சுற்றி வளைத்தார். பின்னர் போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், திருட முயற்சி செய்த நபர் போச்சம்பள்ளியை அடுத்த வீரமலை பகுதியை சேர்ந்த கிரண்குமார் என்பதும், அவர் மேலும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. கிரண்குமாரிடமிருந்து 3 சவரன் நகை மீட்கப்பட்டது. மேலும் இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.