கர்நாடகா: கர்நாடகா தேர்தலுக்கான காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியில், ‘பிஎப்ஐ மற்றும் பஜ்ரங் தளம் போன்ற சாதி மதத்தின் அடிப்படையில் சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்போம்’ என கூறப்பட்டிருந்தது. தீவிர இந்து அமைப்பான பஜ்ரங் தளத்தை காங்கிரஸ் குறிவைத்திருப்பதாக பிரசாரத்தில் மதத்தை புகுத்திய பிரதமர் மோடி, ‘ஜெய் பஜ்ரங் பலி’ கோஷத்தை முன்வைத்தார். ‘முன்பு பகவான் ராமரை பூட்டினர். இப்போது ஹனுமனை பூட்ட விரும்புகிறார்கள். காங்கிரசின் துஷ்பிரயோக கலாச்சாரத்தை கண்டிக்க, அனைவரும் வாக்குப்பதிவு இயந்திர பட்டனை அழுத்தும் போது ‘ஜெய் பஜ்ரங் பலி’ (அனுமன் வாழ்க) கோஷமிடுங்கள்’ என்றார் பிரதமர் மோடி. இது சர்ச்சையானது.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றததைத் தொடர்ந்து, அனுமன் காங்கிரஸ் பக்கம்தான் இருக்கிறார் என அக்கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறுகையில், ‘‘பஜ்ரங் தளத்தை பஜ்ரங்பலியுடன் பாஜ சமன் செய்வது அனுமனை அவமதிக்கும் செயல். அதற்கு மக்கள் பழிவாங்கியுள்ளனர்’’என்று கூறினார். சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் சஞ்சய் ராவத் தனது டிவிட்டரில், ஒருபுறம் அனுமன் மறுபுறம் பிரதமர் மோடியின் படத்தை பதிவிட்டு, அனுமன் படத்திற்கு மேல் ‘பஜ்ரங்பலி 130 பிளஸ்’ என்றும், மோடி படத்திற்கு மேல் ‘பஜ்ரங்தளம் 60 பிளஸ்’ என்றும் எழுதி ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டிருந்தார்.