சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக – அமமுக இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து பின்னர் தெரியவரும்.
தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது;
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கேட்ட 2 தொகுதிகள் கொடுக்கபட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பாஜக தரப்பில் பின்னர் அறிவிக்கப்படும். எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக அறிவித்தவுடன் அமமுகவுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியினரின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. முதலில் பாஜக எங்களுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தார்கள், பின்னர் கூட்டணிக்கு கூடுதல் கட்சிகள் வந்ததால் குறைத்து தந்துள்ளார்கள். ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன், குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது போட்டியிங்கள் என்று பாஜக கூறியது. போதும் என்ற மனநிலை இருந்ததால் 2 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டோம். 2 தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள்.
தமிழக மக்கள் குறித்து ஒன்றிய அமைச்சர் பேசியது கண்டனத்துக்குரியது. அவரே தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். அணிலை போல பிரதமர் மோடிக்கு உதவுவேன் என அவர் கூறினார்.