திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் பணிமனையிலிருந்து பேருந்துகள் முறையாக இயக்காமல், சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுவதால் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட கல்பாக்கத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து காஞ்சிபுரம், தாம்பரம், வேலூர், புதுச்சேரி, கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட புறநகர்களுக்கும், கல்பாக்கம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கும் என 38க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இங்கு இயக்கப்படுகின்ற பேருந்துகளின் மூலம் தான் நகர்புறங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர. ஆனால் காலை, மாலை நேரங்களில் அத்தியாவசியமான மற்றும் பயணிகள் தினந்தோறும் வழக்கமாக பயன்படுத்துகின்ற பேருந்துகளை முறையாக இயக்கப்படாததால் மிகவும் அவதிப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கூறுகையில், ‘ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும்பாலும் தினந்தோறும் வெளியிடங்களுக்கு செல்ல பயன்படுத்துவது இதுப்போன்ற அரசு பேருந்துகளைத்தான்.
அப்படியிருக்கையில், இந்த கல்பாக்கம் பணிமனையில் மட்டும் முறையாக காலை, மாலை நேரங்களில் பேருந்துகளை இயக்காததால் பள்ளி கல்லூரிக்கு செல்கின்ற மாணவ – மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போதிய அளவில் பேருந்துகள் இருந்தும் ஏன் இயக்கப்படுவதில்லை. இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக அதாவது தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக, மாதந்தோறும் வருகின்ற பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலைக்கும், அமாவாசை தினத்தில் மேல்மலையனூருக்கும் சிறப்பு பேருந்துக்களாக இயக்கப்படுகின்றன.
மேலும், இதுப்போன்று எங்கெல்லாம், எப்போதெல்லாம் பயணிகள் கூட்டம் இருக்குமோ, அங்கெல்லாம் கல்பாக்கம் பணிமனையில் இருந்து தான் சிறப்பு பேருந்துகளாக அனுப்பப்படுகிறது. இதனால், வழக்கமாக வெளியில் செல்பவர்கள் பேருந்துகள் இன்றி கல்பாக்கம் பணிமனை முன்பு காத்துக் கிடந்து பல மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் பணிமனை அதிகாரிகளிடத்தில் வாக்குவாதம் செய்தபின் இயக்கப்படுகின்ற ஒன்றிரண்டு பேருந்துகளில் முண்டியடித்து ஏறி தாமதமாக பள்ளி, கல்லூரிக்கும் வேலைக்கும் செல்ல வேண்டியுள்ளது.
ஏன் இப்படி வழக்கமாக இயக்கப்படுகின்ற வழித்தடங்களை நிறுத்திவிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க அதிகாரிகள் முன்னுரிமை தருகிறார்கள் என்றால், வெளியில் இயக்கப்படுகின்ற ஒவ்வொரு சிறப்புப் பேருந்துக்கும் பணிமனை அதிகாரிகளுக்கு கணிசமான காசு கிடைப்பதால், சிறப்பு பேருந்துகளை இயக்க முக்கியத்துவம் தருவதாக கூறப்படுகிறது. அதேப்போல், ஏற்கெனவே இந்தப் பணிமனையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பற்றாக்குறை உள்ள நிலையில் பணிமனை அதிகாரிகளின் வலுக்கட்டாயத்தால் புதிய வழித்தடம் மற்றும் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகளில் பணி முடித்து அசதியில் வரும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மறுநாள் ஓய்வெடுத்து விடுகின்ற நிலையில், அந்தப் பேருந்துகள் இயக்கப்படாமல் சும்மாவே நின்றுக் கொண்டிருக்கும்.
இதுபோன்ற தொடர் அவல நிலையிலும், அலட்சிய போக்கிலும் இயங்கி வருகின்ற கல்பாக்கம் போக்குவரத்து பணிமனை நிர்வாகத்தால், பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சரிசெயும் வகையில், சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறை உயரதிகாரிகள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, இந்த நிலையை மாற்றி பயணிகளுக்கு போதிய மற்றும் காலை, மாலை உள்ளிட்ட குறித்த நேரத்தில் முறையாக பேருந்துகளை இயக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லை, இதே நிலை நீடித்தால் இந்த நிலையை மாற்றக் கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.’ என்றனர்.
* மாதந்தோறும் வருகின்ற பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலைக்கும், அமாவாசை தினத்தில் மேல்மலையனூருக்கும் சிறப்பு பேருந்துக்களாக இயக்கப்படுகின்றன. மேலும், இதுப்போன்று எங்கெல்லாம், எப்போதெல்லாம் பயணிகள் கூட்டம் இருக்குமோ, அங்கெல்லாம் கல்பாக்கம் பணிமனையில் இருந்து தான் சிறப்பு பேருந்துகளாக அனுப்பப்படுகின்றன.