டெல்லி: ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை சரியே என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கொண்டு தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
பேப்பர் கப் மற்றும் மெழுகு உள்ளிட்ட உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள், ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் கப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ரவீந்திரப்பட் மற்றும் அரவிந்த் குமார் அமர்வில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் நீதிபதிகள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதன்படி, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பேப்பர் கப்புகள் மீதான தடை உத்தரவை ஒன்றிய அரசின் நடைமுறைகள் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.