Saturday, May 18, 2024
Home » கர்ப்பிணி கருப்பை வாயில் நஞ்சுக்கொடி நவீன பலூன் சிகிச்சை முறையில் ரத்தப்போக்கின்றி குழந்தை பிரசவம்: மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

கர்ப்பிணி கருப்பை வாயில் நஞ்சுக்கொடி நவீன பலூன் சிகிச்சை முறையில் ரத்தப்போக்கின்றி குழந்தை பிரசவம்: மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

by Dhanush Kumar

சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் சர்வதேச மருத்துவமனைக்கு சென்னையை சேர்ந்த பிரியதர்ஷினி (37) என்ற கர்ப்பிணி பிரசவ வலியுடன் கடந்த மாதம் வந்தார். அவருக்கு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி குழுவினர் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் கருப்பை வாயை மூடியபடி நஞ்சுக்கொடி படர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தால் ரத்தப்போக்கு ஏற்பட்டு, அந்த பெண்ணின் உயிரையும் மற்றும் குழந்தையின் உயிரையும் இழக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இரண்டு உயிரையும் காப்பாற்ற மருத்துவ குழுவினர் முயன்றனர்.

இயற்கையான பிரசவத்திற்கு வாய்ப்பில்லாததால் அவரது தொடை பகுதியில் நுண்துளை போட்டு அதன் வழியாக சிறு குழாயுடன் பலூனை செலுத்தி கர்ப்பப்பையில் இருந்து ரத்தப்போக்கு வெளியேறாதபடி தடுப்பு ஏற்படுத்தி அறுவை சிகிச்சை மூலம் நஞ்சுக்கொடியை கிழித்து குழந்தையை வெளியே எடுத்தனர். இந்த நவீன சிகிச்சை முறையால் தாய், சேய் நலமாக உள்ளனர். இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு மியாட் மருத்துவமனை அரங்கத்தில் நேற்று நடந்தது. மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், மருத்துவர்கள் கார்த்திக் தாமோதரன், சரஸ்வதி ஆகியோர் கூறியதாவது:

பிரியதர்ஷினி தனது 2வது பிரசவத்திற்காக மியாட் வந்தார். 35 வாரம் நடத்திய பரிசோதனையில் அவரது கருப்பை வாயை மூடியபடி நஞ்சுக்கொடி இருந்தது. அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே கொண்டு வந்தால் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு தாய், சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவருக்கு அறுவை சிகிச்சையின்போது ரத்த இழப்பை தடுக்க, அவரது தொடையில் நுண்துளையிட்டு 2 குழாய்களுடன் பலூன் போல் பொருத்தப்பட்டது. இதன் மூலம ரத்தம் வெளியேறாமல் சீராக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிரியதர்ஷினி கூறுகையில், ‘‘கணவருடன் மருத்துவமனைக்கு வந்தேன். நஞ்சுக்கொடி கர்ப்பப்பை வாய் பகுதியை மூடியுள்ளதால் பிரசவம் கடினம் என்பதை அறிந்தேன். எனக்கு ஏதாவது நடந்தால் எனது முதல் பெண் குழந்தையை எண்ணி பயந்தேன். ஆனால், மருத்துவர்களின் உதவியால் உயிர் பிழைத்துள்ளேன், நலமாக இருக்கிறேன், மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

You may also like

Leave a Comment

twelve − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi