Wednesday, May 22, 2024
Home » முந்தைய பாஜ ஆட்சியின் ஊழலை எதிர்த்து பைலட் உண்ணாவிரதம் அறிவிப்பு: ராஜஸ்தான் காங்கிரசில் புகைச்சல்

முந்தைய பாஜ ஆட்சியின் ஊழலை எதிர்த்து பைலட் உண்ணாவிரதம் அறிவிப்பு: ராஜஸ்தான் காங்கிரசில் புகைச்சல்

by Ranjith

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 2013 முதல் 2018 வரை வசுந்தர ராஜே தலைமையிலான பாஜ ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். காங்கிரசின் வாக்குறுதியிலும் இது இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், முந்தைய பாஜ அரசின் ஊழல்களுக்கு எதிராக கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘முந்தைய பாஜ ஆட்சியில் நடந்த ரூ.45,000 கோடி சுரங்க ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் தொடர்பாக தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம்.

ஆனால், ஆட்சிக்கு வந்தபின் முதல்வர் அசோக் கெலாட் அரசு எதுவும் செய்யவில்லை. ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் கெலாட்டுக்கு 2 முறை கடிதம் அனுப்பினேன். இன்னும் 6-7 மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. எனவே எதிர்க்கட்சியான பாஜ இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முன்பாக, முந்தைய பாஜ ஆட்சியின் ஊழலுக்கு எதிராக முதல்வர் கெலாட் நடவடிக்கை எடுக்க கோரி ஏப்ரல் 11ம் தேதி (நாளை) ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளேன்’’ என்றார். ராஜஸ்தானில் கெலாட் தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து கெலாட்-சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. அவ்வப்போது கட்சி தலைமை தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைக்கிறது. தற்போது மீண்டும் உட்கட்சி மோதல் புகையத் தொடங்கியிருப்பது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

nineteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi