புதுடெல்லி: மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன், ‘‘லித்தியம்-அயன் பேட்டரி கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதால் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. மேலும், பேட்டரி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டி உள்ளது’’ என்றார்
இதற்கு பதிலளித்த ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘இதுபோன்ற அறிக்கையோ, கண்டுபிடிப்புகளோ எங்களிடம் இல்லை. எனினும் இந்த சிக்கலை நாங்கள் தீவிரமாக கவனித்து, லித்தியம்-அயன் பேட்டரி கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம். அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார கார்கள், பேருந்துகள், லாரிகள் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடாக மாறும். மின்சார வாகனங்கள் பிரபலமாக இருந்தாலும், அவற்றின் விலை பெட்ரோல், டீசல் வாகனங்களை விட அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், விற்பனை அளவுதான். மின்சார வாகனங்கள் இன்னும் அதிகமாக விற்கும் போது விலை குறையும். என்னை பொறுத்த வரை, ஒன்றரை வருடத்திற்குள் பெட்ரோல், டீசல் வாகனத்திற்கு இணையான விலைக்கு மின்சார வாகனங்கள் வரக்கூடிய வாய்ப்புள்ளது’’ என்றார்.