சென்னை: மக்களை தேடி மேயர் திட்டத்தின் கீழ் மே 3ம் தேதி ராயபுரம் மண்டலத்திற்க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்: சென்னை மாநகராட்சி மேயர் 2023-24ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், “மக்களை தேடி மேயர்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மேயர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு, மேயர் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு வட்டார அலுவலகத்தில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நேரடியாகப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் “மக்களை தேடி மேயர்” திட்டம் தற்பொழுது செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே பொதுமக்களின் குறை தீர்ப்பு அமைப்பு வாயிலாக 1913 அழைப்பு மையம், நம்ம சென்னை செயலி ஆணையாளர் அலுவலகம், வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் தபால்கள் மூலமும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டு, அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அப்புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, முதற்கட்டமாக “மக்களை தேடி மேயர்” திட்டத்தின் கீழ், வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மே 3ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்கள்.
எனவே, சென்னை மாநகராட்சி, வடக்கு வட்டாரத்தில் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.