நாக்பூர்: ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மக்களவை உறுப்பினராக உள்ளார். இவரது நாக்பூர் அலுவலகத்தை கடந்த ஜனவரி 14ம் தேதி தொடர்பு கொண்ட மர்ம நபர் ரூ.100 கோடி தர வேண்டும். இல்லாவிட்டால் நிதின் கட்கரியை கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதேநபர் கடந்த மார்ச் 21ம் தேதி தொடர்பு கொண்டு ரூ.10 கோடி தரவிட்டால் நிதின் கட்கரியை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நாக்பூர் காவல்துறையினர், கர்நாடக மாநிலம் பெலகாவி சிறையில் இருந்து மர்ம நபர் போன் செய்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற நாக்பூர் காவலர்கள், பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ் பூஜாரியை கைது செய்து நாக்பூர் கொண்டு வந்தனர். அவர் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் ஜெய்ஷ் பூஜாரிக்கும், பெங்களூரு தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தீவிரவாதி அப்சர் பாஷாவுக்கும் தொடர்பு இருப்பதை நாக்பூர் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.